×

உத்தமபாளையம் வனப்பகுதிகளில் வன உயிரினங்களை காப்பதற்கு மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்படுமா?: வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

தேவாரம்: உத்தமபாளையம் அடர்ந்த வனப்பகுதிகளில் வனஉயிரினங்களை காக்கும் மரங்களை நடுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்த்தில் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளாக தமிழக&கேரளா வனப்பகுதிகள் அமைந்துள்ளன. குறிப்பாக தேவாரம், கூடலூர், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், பண்ணைப்புரம், கோம்பை உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகமானஅளவில் காட்டுயானைகள் வாழ்கின்றன. இவை தவிர மான்கள், கேழையாடுகள், காட்டுமாடுகள், காட்டுபன்றிகள் அதிகம் வாழ்கின்றன. இந்த விலங்குகளுக்கு உணவு பிரச்னைகள் உண்டாகும்போது திடீரென வனத்தில் இருந்து இறங்கி தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, தக்காளி, சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்கின்றன.

ஆனால் இதற்கும் இப்போது வழியில்லை. காரணம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்கள் மழை இல்லாதபோது அவை காய்ந்து கிடக்கின்றன.இதனால் காட்டுயானைகள், பன்றிகள், காட்டுமாடுகள் தீவனம் இல்லாமல் தவிக்கின்றன. காட்டு யானைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் மூங்கில் மரங்கள் மிக முக்கியமானதாக உள்ளன. இவைகளும் அதிகமானஅளவில் இல்லை. காரணம் வனப்பகுதிகளில் மழையில்லாத நிலையில் மூங்கில் மரங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வனத்தில் அதிகமான மரங்கள் இருந்தால் அதனை தீவனமாக தின்று அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள்ளேயே இருக்கும்.

எனவே மூங்கில் மரங்கள், தேக்கு, சந்தனம், தோதகத்தி, உள்ளிட்ட பல்வேறு மரங்களை நடுவதற்கு தேனிமாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக வனப்பகுதிகளில் இயற்கை ஆர்வலர்களை கொண்டு மூங்கில் மரங்களை அதிகம் நடுவதற்கு மாவட்ட வனஅதிகாரிகள் அனைத்து ஊர்களின் ரேஞ்சர்களை அழைத்துப்பேசி உரிய நடவடிக்கை எடுப்பது மிக அவசியம்.இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், உத்தமபாளையம் வனப்பகுதிகளுக்கு மிக அருகாமையில் கேரளா வனப்பகுதி உள்ளன. இங்கு வாழக்கூடிய விலங்கினங்கள் அதிகமானஅளவில் இடம் பெயர்கின்றன. காரணம் உரிய வாழ்வாதாரமாக கருதப்படும் இரைகள் இல்லை. எனவே இதற்கான உணவாக கருதப்படும் மரங்களை அதிகம் நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Uttampalayam , For conservation of wild life in Uttamapalayam forest areas Will the sapling program be launched?: Forest activists expect
× RELATED போடி விரிவாக்க சாலையில் சாலை நடுவே...