மதுரை: மதுரை விமானநிலையத்தில் நிதி அமைச்சர் கார் மீது செருப்பு வீசியது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்ணுக்கு உதவியதாக கூறப்படும் ஆயுதப்படை போலீஸ்காரர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியான மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன்உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மலர் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பினார். அப்போது, பாஜவை சேர்ந்தவர்கள் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக 6 பேரை முதற்கட்டமாக அவனியாபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய பெண் குறித்தும், அவருடன் வந்தவர்கள் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு பதிவான வீடியோ காட்சிகள் மூலம் விசாரித்து, திருமங்கலம் அருகே வாகைக்குளத்தில் பதுங்கியிருந்த மதுரை விளாங்குடியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வானை ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சி தொழிலதிபர் ஜெய் கருணா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய பெண்ணுக்கு, மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் அடைக்கலம் கொடுத்து உதவி செய்ததாக தெரிய வந்துள்ளது. அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.