×

விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: தமிழகத்தில் 45 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் தரிசாக மாறும் அபாயம்; கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா

நாட்டில் மூலை மூடுக்கெல்லாம் வசிக்கும் மக்கள், ஒரு வேளை உணவையாவது வயிறு நிறைய இன்று சாப்பிடுகிறார்கள் என்றால் அது எந்தவித லாபம் நோக்கமும் இன்றி நிலத்தை உழவு செய்யும் ஒவ்வொரு விவசாயியின் உழைப்புதான். விவசாயியின் ஒவ்வொரு துளி வியர்வையும் ஒவ்வொரு குடிமகன்களின் பசியை போக்குகிறது. ஆனால், விவசாயியின் பசியை போக்க வேண்டிய ஒன்றிய அரசு, விவசாயத்தையே அழிக்கும் வேளையில் இறங்கி உள்ளது. ‘விவசாயம்’ நாட்டின் முதுக்கெலும்பு. விவசாயத்தையும், விவாசயிகளையும் காக்கும் எந்த நாடும் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், விவசாயமும், விவசாயிகளும் செத்து மடியும் சூழல் ஏற்பட்டால் அந்த நாடு வீழும். இதுதான் வரலாறு.

உச்சபட்ச அதிகாரத்தில் உள்ளவர்கள், சில தொழிலதிபர்களுக்காக நாட்டை கூறுபோட்டு வருகின்றனர். முதலில், வேளாண் சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்தார்கள். இதற்கு எதிராக விவசாயிகள் நடத்திய நீண்ட நெடிய போராட்டம், உயிர் தியாகம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு பிறகு, வேளாண் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. தற்போது, மின்சாரத்தை தனியாருக்கு கூறுபோட துடிக்கிறது. இதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதுதான் மின்சார சட்டத்திருத்த மசோதா. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரும் மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். விளை நிலங்களே இல்லாத நிலை ஏற்படும்.

* விவசாயிகளின் தியாகம்
ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால் கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், விவசாயமும் அதன் சார்ந்த பொருட்களின் விளைச்சலும், விற்பனையும், ஏற்றுமதியும் செழிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு நடந்தால், விவசாயிகள் தங்கள் மாளிகையில் (குடிசை அல்லது ஓட்டு வீட்டில்) மன நிறைவுடன் ஒரு வேளை சாப்பாட்டை உண்பார்கள். இல்லையென்றால் வாங்குகின்ற கடனை திருப்பி செலுத்த முடியாமலும், அதற்கு வட்டி கட்ட முடியாமலும் உயிரை மாய்த்து கொள்வார்கள். ஒவ்வொரு விவசாயியும் நாட்டின் மக்களின் பசியை போக்க பல்வேறு தியாகத்தை செய்கின்றனர். கடனை திருப்பி கொடுக்க முடியாதபோது வங்கிகளும், தனி நபர்களும் கேட்கும் வார்த்தைகளால் மனமுடைந்து, தன்மானமே முக்கியம் என்று உயிரை விடுகின்றனர். நாட்டில் பல தொழிலதிபர்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு, விவசாயிகளின் கடனை மட்டுமே தள்ளுபடி செய்யாமல் அடம் பிடித்து வருகிறது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, சில தொழிலதிபர்கள் வாங்கிய ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

* உழவனின் அருமை
நாட்டில் உள்ள சில தொழிலதிபர்களுக்காகவும், அவர்கள் சார்ந்த தொழில்களுக்கும் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கும் ஒன்றிய அரசு, ஓட்டை குடிசையில் வசிக்கும் விவசாயிகளிடம் பல்வேறு வழிகளில் அவர்களின் உழைப்பின் லாபத்தை பறிக்கிறது. நாட்டின் முதல் குடிமகனான ஜனதிபாதி முதல் கடைகோடி கிராமத்தில் வசிக்கும் ஏழை குழந்தை வரை அவர்களின் பசியை போக்குகிறவர்கள் இந்த விவசாயிதான் என்று வானளாவிய அதிகாரத்தில் உள்ளவர்கள் மறந்துவிடுகிறார்கள். உக்ரைன்-ரஷ்யா போரால் பல்வேறு நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயம் முற்றிலும் முடங்கி உள்ளது. உலகளவில் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்த 2 நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவு பற்றாக்குறையால் அந்நாடுகளில் சுமார் 20 கோடி மக்கள் பட்டினியால் தவித்து வருகின்றனர். இப்போதுதான் உழவனின் அருமையை அந்த நாடுகள் உணர்கின்றன.

* காக்க வேண்டிய சூழல்
விவசாயிகளின் கதறலுக்கு எந்த நாடு செவி சாய்க்கவில்லையோ, அந்த நாடு ஒருநாள் கண்ணீர் விட்டு கதறி அண்டை நாடுகளிடம் கையேந்தும் அவல நிலை வரும். அதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. இலங்கையில் செயற்கை விவசாயத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், இயற்கை விவசாயம் மூலம் அந்நாட்டு மக்களின் பசியை விவசாயிகளால் போக்க முடியவில்லை. இதனால், அங்கு கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நவீன உலகத்தில் விளை நிலங்களை அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் வானுயர கட்டிடங்களை நிறுவி, கை நிறைய பணம் பார்த்தாலும், ஒரு நாள் பசியின் கொடுமை வரும்போதுதான் விவசாயியின் அருமை தெரியும் என்பார்கள். அந்த நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி...விவசாயி... விவசாயி...’ என்று விவசாயம் அழியாமல் இருக்கவும், விவசாயிகள் கண்ணீர் சிந்தாமல் இருக்கவும் உறுதிமொழி ஏற்க வேண்டிய கட்டாயத்தை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளது.

* உணவு தட்டுப்பாடு
தமிழகத்தில் சுமார் 47 லட்சம் ஹெக்ேடர் விவசாய நிலங்களில் உள்ளது. இதில், நெல், தென்னை, சோளம், மலை பயிர்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், காய்கறிகள், பழ வகைகள், ஏலக்காய், மிளகு, பூக்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவர்களுக்காக தமிழக அரசு சார்பில் சுமார் 22.87 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் 45 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஆண்டுக்கு சராசரியாக 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்தாண்டு 34 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு 40 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் புயல், மழை, வெள்ளம், பூச்சி தாக்குதல், வறட்சி, வானிலை மாற்றம், தரமில்லாத நெல் ரகம் போன்ற பிரச்னைகள் இல்லாமல் இருந்தால், மேற்கண்ட சாகுபடியை எதிர்ப்பார்க்கலாம். ‘சோழ நாடு சோறுடைத்த நாடு’ என்பார்கள். இந்த சோழ நாடான டெல்டா பகுதியில் மட்டும் 13.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் தென்னை விவசாயமும் அதிகளவில் நடக்கிறது. இதில் இருந்து தேங்காய் எண்ணெய், கயிறு, பாக்கிங் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

* கூறுபோட நினைத்தால்...
எந்தவித லாப நோக்கமும் இன்றி இரவு பகல் பாரமல் உழைக்கும் எந்த உழவனும் கோடிக்கணக்கில் சம்பாதித்து பிரமாண்ட மாளிகையில் வாழ்வதில்லை. காலையில் பழைய சோறு (ஐஸ் பிரியாணி) கட்டி கொண்டு வயலுக்கு போகும் விவசாயி, கொளுத்தும் வெயிலில் உழவு பணி செய்து காய்ந்து கருவாடாக வீடு திரும்புகிறான். உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், தனது பணியை விவசாயி விடுவதில்லை. லாபமோ, நஷ்டமோ, அவர்களது ஒரே பணி மக்களின் பசியை போக்குவதுதான். எனவே, விவசாயிகளிடம் கணக்கு பார்க்கும் ஒன்றிய அரசு, அவர்கள் படும் வேதனைகள், நஷ்டங்கள், கஷ்டங்கள் பற்றி யோசிக்க வேண்டும். உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு (ஆழாக்கு) கூட மிஞ்சாது. பொதுத்துறை நிறுவனங்களை விற்று கஜானாவில் காசு சேர்ப்பதுபோல், விவசாயத்தையும் எண்ணிவிட வேண்டாம். விவசாயத்தைகூறுபோட்டால் நாட்டில் உள்ள அனைவரும் சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்.

* தமிழகத்தில் 45 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் நடக்கிறது
* 45 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது
* ஆண்டுக்கு சாரசரியாக 30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது
* 22.87 லட்சம் இலவச மின் இணைப்பு உள்ளது

* ஒரு ஏக்கர் நெல் சாகுபடியில் கிடைப்பது என்ன?
ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்தால் விதை, உரம், பூச்சி மருந்து, உழவு, நடவு உள்ளிட்ட பணிகளுக்கான செலவு போக (மின்கட்டணம் செலுத்தாமல்) விவசாயிக்கு எவ்வளவு கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
விதை    ரூ.1700
உரம்    ரூ.4700
பூச்சி மருந்து    ரூ.1150
உழவு, நாற்று நடவு, களை பறித்தல் உள்ளிட்ட பணிகள்    ரூ.22,350
மொத்த செலவு    ரூ.35,900

விவசாயியிடம் இருந்து ஒரு மூட்டை நெல், 40 கிலோ என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. அதிகபட்ச விளைச்சல் இருந்தால் ஒரு ஏக்கருக்கு 54 மூட்டைகள் கிடைக்கும். விளைச்சல் சராசரியாக இருந்தால் 45 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும். இயற்கை சீற்றம், தரமில்லாத நெல் ரகம், வறட்சி போன்ற பிரச்னைகள் இருந்தால் எவ்வளவு கிடைக்கும் என்று கூற முடியாது.
ஒரு கிலோ நெல் ரூ.20
40 கிலோ நெல் மூட்டை ரூ.800

மும்முனை மின்சாரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வழங்கப்படுகிறது. 5 எச்பி மோட்டர் பயன்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு ஒரு நாளைக்கு 45 யூனிட் ஆகிறது. நெல் பயிர் காலம் 120 நாட்கள். இந்த கால கட்டத்தில் 5400 யூனிட் பயன்படுத்தப்படும். ஒரு யூனிட் ரூ.10 என்று வசூலித்தால் ரூ.54,000 மின்கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதனால், செலவு மட்டுமே ரூ.89,900 (ரூ.35,900+ரூ.54000) ஆகும்.

* ஒரு ஏக்கரில் 54 மூட்டை கொள்முதல் செய்தால் கிடைப்பது ரூ.43,200 (54x800)
* மொத்த செலவு 35,900 கழித்தால் கிடைப்பது ரூ.7,300
* 45 மூட்டைகள் நெல் விற்றால் கிடைப்பது ரூ.36,000 (45x800)
* மொத்த செலவு 35,900 கழித்தால் கிடைப்பது ரூ.100

* 27 மாநிலங்களில் மானியம், இலவசம்
நாட்டில் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 2020-2021ம் நிதியாண்டில் ரூ.1.32 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உழைப்புக்கு ஊதியம் ஏதுவும் சேர்க்கப்படவில்லை. குறைந்தது காலை, மாலையில் வயலில் தலா 2 மணி நேரம் ஒரு விவசாயியோ அல்லது அவரது குடும்பத்தினரோ செலவிடுகின்றனர். தண்ணீர் பாய்ச்ச வேண்டுமென்றால் 24 மணி நேரமும் இருக்க வேண்டி உள்ளது. இதற்கான ஊதியத்தை அவர்கள் தனியாக கணக்கு சேர்க்கவில்லை. உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் 4 பேர் (கணவன், மனைவி, தாய், தந்தை அல்லது மகன், மகள்) வேலை செய்கிறார்கள் என்றால் ஒரு நாளை ரூ.500 குறைந்தபட்சம் அவர்களின் ஊதியமாக கணக்கு வைத்துகொண்டால் 120 நாட்களுக்கு ரூ.2,40,000 ஆகும். ஆனால், ஒன்றிய அரசு சார்பில் அமைக்கப்பட்ட எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையில் ஒருவர் உழைப்பு மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.

சொந்த நிலத்தை வைத்துள்ளவர்களுக்கு நில வாடகை தேவையில்லை. ஆனால், சிலர் கடன் பெற்று நிலத்தை வாங்கி விவசாயம் செய்கிறார்கள். அவர்கள் நில வாடகை மற்றும் அதற்கான வட்டியும் கட்ட வேண்டி உள்ளது. இது எல்லாம் சேர்த்தால் விவசாயியின் நிலை பரிதாபம்தான்.  தற்போதைய நிலையில், இலவச மின்சாரம் பயன்படுத்தியும் ஒரு ரூபாய் கூட லாபம் எடுக்காமல் உள்ள விவசாயிகளும் இருக்கின்றனர்.

* தறி தொழில் முடங்கும்
கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு 1 லட்சம் கைத்தறிகளும், 5 லட்சம் விசைத்தறிகளும் இயங்கி வருகின்றன. இதில் கைத்தறிக்கு மாதம் 100 யூனிட் மின்சாரமும், விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரமும், தறிசார்ந்த இதர தொழில்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் அரசு, இலவசமாக வழங்கி வருகிறது. தறி தொழிலை நம்பி மட்டும் லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தை நம்பியே ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால், தறி தொழில் முற்றிலும் முடங்கி, இதை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்.

* இலவச ரேஷன் அரிசிக்கும் வேட்டு
பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 2.13 கோடிக்கு மேல் குடும்ப அட்டைத்தாரர் களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரிசி போக, வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. மின்சார சட்டத்திருத்த மசோதாவால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டால், அரிசி தட்டுப்பாடு ஏற்படும். இதனால், ரேஷன் கடைகளில் வழங்கும் இலவச அரிசி விநியோகம் தடைப்படும்.

* கால்நடைகள் உயிரிழக்கும்
நெல் சாகுபடி முடிந்து அறுவடை செய்யும்போது, அந்த நிலத்தில் இருந்துதான் வைக்கோல் எடுக்கப்படுகிறது. இதுதான், கால்நடைகளுக்கு (மாடு) தீவனமாக வழங்கப்பட்டு வருகிறது. இலவச மின்சாரம் ரத்தானால் விவசாயம் முடங்கும் சூழல் ஏற்படும். அவ்வாறு நடந்தால் கால்நடைகளும் உணவின்றி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.  

* உரம் தட்டுப்பாடு
ரஷ்யா மற்றும் பெலராஸ் நாட்டில் தான் உரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது ரஷ்யா-உக்ரைன் போரால் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இதனால், கடுமையான உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலங்களுக்கு தர வேண்டிய உரத்தையும் தரவில்லை. தட்டுப்பாடு காரணமாக உர விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், அதிக பணம் கொடுத்து உரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : Ratan ,Tamil Nadu , Free electricity for farmer Ratan not even alaska: 45 lakh hectares of arable land in Tamil Nadu at risk of becoming barren; The Union Government's Electricity Act Amendment Bill will lead to severe food shortages
× RELATED வாஸ்குலர் அறுவை சிகிச்சையை...