சென்னை: சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 2021 மற்றும் 2022-23ம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற மானியக் கோரிக்கைகளின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் முன்னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:கடந்த இரண்டு நிதியாண்டுகளில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் நிலுவையில் உள்ள அறிவிப்புகளை இந்தாண்டு இறுதிக்குள் முடித்திடும் வகையில் திட்டம் வகுத்து பணியாற்றிட வேண்டும். அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகை வழங்குதல், தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு பேசினார்.