கிருஷ்ணகிரி : எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ந்து 2024ஆம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் திட்டத்தில் ஓலா நிறுவனம் மும்பரமாக உள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிக பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மையம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைய உள்ளது. ஓலா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் வெளியிட்ட செய்தியில் 2024ஆம் ஆண்டு ஓலாவின் முதல் மாடல் எலக்ட்ரிக் கார் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். 2026 அல்லது 2027ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு 10 லட்சம் கார்களை தயாரிக்க இலக்கு கொண்டுளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓலா தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்கள் 4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. வரை செல்லும் என்றும் பவிஷ் அகர்வால் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் கார்கள் மற்றும் ஒரு கோடி இருசக்கர வாகனங்கள் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் பவிஷ் அகர்வால் தெரிவித்தார். எலக்ட்ரிக் கார் உற்பத்தி குழுவில் பணியாற்ற 1000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அது மட்டுமல்லாமல் இலித்தியம், அயன் பேட்டரி உற்பத்தியை இந்தியாவிலேயே தொடங்க ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.