சீர்காழி : சீர்காழியில் பாரம்பரிய நெல்திருவிழா நேற்று நடந்தது. இதில் 150 வகையான நெல்ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக மாநில அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் 8ம் ஆண்டு விழா சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. அறக்கட்டளை மூத்த உறுப்பினர் வழக்கறிஞர் சுந்தரய்யா தலைமை. வகித்தார். செயலாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி, நிர்வாக அலுவலர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். உறுப்பினர் கருமுத்து வரவேற்றார்.
பாரம்பரிய நெல் திருவிழாவை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் தொடங்கி வைத்து காட்சிப்படுத்தப்பட்ட நெல் ரகங்களை பார்வையிட்டார். தொடர்ந்து பாரம்பரிய நெல்லின் நன்மைகள் மற்றும் மரபு வழி விவசாயம் குறித்து தஞ்சாவூர் கோ.சித்தர், தமிழர் மேலாண்மையை சேர்ந்த ஞானப்பிரகாசம், விதை பாதுகாப்பாளர் வேதாரண்யம் சிவாஜி, பனை ஆனந்த், பண்ணையம் ஒருங்கிணைந்த காசிராமன் கருத்துரையாற்றினர்.
தொடர்ந்து இயற்கை விவசாயிகளுக்கு துணைவேந்தர் கதிரேசன் மற்றும் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா ஆகியோர் நம்மாழ்வார் விருது, பாரம்பரிய நெல் விதை ரகங்களை வழங்கினர்.
இதில், 150க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறுதானியங்கள், இயற்கையான பழங்கள் பயன்படுத்தி ரசாயன கலப்படமற்ற ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு வைத்திருந்தனர்.
இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் விரும்பி உண்ண வைத்தது. மேலும் இயற்கை விதைகள், மூலிகைச் செடிகள், இயற்கை உரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இயற்கை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்தி உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டன. நெல் திருவிழாவில் முன்னோடி இயற்கை விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.