×

அதிமுகவில் பதவி வெறிபிடித்து அலைகிறார்கள்; அமமுக பொதுக்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு

சென்னை: அதிமுகவினர் பதவி வெறிபிடித்து அலைவதாக அமமுக பொதுக்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் கூறினார். சென்னை அடுத்த வானகரம் தனியார் திருமணம் மண்டபத்தில் அமமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் தலைமை வகித்தனர். இதில், அமமுகவுக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது, பேரறிவாளனைப்போல் மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமமுகவில் தலைவர் பதவி சசிகலாவுக்காக காலியாக வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை டிடிவி தினகரன் தெரிவித்து வந்த நிலையில் கட்சியின் தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது: ஆர்கே நகர் வெற்றி மட்டுமே நமக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதிமுக அக்மார்க் சுயநலவாதிகளிடம் மாட்டிக்கொண்டுள்ளது. சொந்த கட்சியிலேயே பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை காசுகொடுத்து வாங்கும் கேவலமான நிலை அதிமுக உள்ளது. பதவி ஆசை இருக்கலாம், பதவி வெறிபிடித்து அலைகிறார்கள். 90% ஆதரவு உள்ளது கூறுபவர்கள் கட்சியில் தேர்தல் நடத்தி வெற்றி பெற்றிருக்கலாமே. ஒற்றைத் தலைமை என்றால் பொதுச் செயலாளர் பதவி தான் வேண்டுமா. சுயநலத்தின் உச்சமாக பதவி வெறியில யாரையும் தூக்கி எறியக்கூடிய ஒரு மனிதர் பழனிச்சாமி. எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை சின்னாபின்னம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கென்று ஒரு இயக்கம் இருக்கிறது.

நாம் ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தானாக அந்த இயக்கம் நம்மிடம் வந்து சேரும். நமக்கு உரிமை இருக்கிறது. இன்றைக்கு வேண்டுமானால் ஒரு 3 ஆயிரம் பேர் பொறுப்பில் வைத்துக் கொண்டு அதை தவறான பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட திட்டங்களை மீறி விட்டார்கள். பன்னீர்செல்வம் தன் தவறுகளையெல்லாம் உணர்ந்து, அவர் செய்ததையெல்லாம் தவறு என்று உணர்ந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் பழனிசாமி இன்னும் மாறவே இல்லை.  மேலும் மேலும் துரோகங்களை செய்து கொண்டே இருக்கிறார். சசிகலாவுக்கு துரோகம் செய்தார்.  அந்த ஆட்சி நிலைப்பதற்காக பாடுபட்ட நமக்கு துரோகம் செய்தார்.

18 எம்எல்ஏக்களுக்கு துரோகம் செய்தார். ஆட்சி போய் விடக் கூடாது என்று உடன் இருந்த பன்னீர்செல்வத்துக்கு துரோகம் செய்தார். அவர் திருந்தினால் அவருடன் இணைவதற்கு பார்க்கலாம். ஆனால் அவர் திருந்த  வாய்ப்பே இல்லை.  பழனிசாமி துரோக சிந்தனை உள்ளவர் சுயநலத்திற்காக யாரையும் கெடுக்கக்கூடியவர். அந்த நபரோடு பயணிப்பது கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.  அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் காலம் நெருங்கிக்  கொண்டு இருக்கிறது.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜ அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,DTV ,Dhinakaran ,AAMUK , In the AIADMK, they are running for office; DTV Dhinakaran's speech at AAMUK general committee meeting
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...