பல்லடம்: பல்லடத்தில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுக்க முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூ எக்ஸ்டென்சன் வீதியில் உள்ள தனியார் வங்கி கிளையில் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இதில் நேற்று முன்தினம் காலை பணம் எடுக்க சென்றவர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பல்லடம் டிஎஸ்பி செளமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், கிளை மேலாளர் தன்ராஜ் மற்றும் ஊழியர்கள் வந்தனர்.
நள்ளிரவில் இங்கு வந்த கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்து எடுக்க முயன்றுள்ளனர். எடுக்க முடியாததால் அவர்கள் தப்பி ஓடியது தெரியவந்தது. இந்த துணிகர சம்பவத்தின்போது அலாரம் ஒலிக்கவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால் பல லட்சம் ரூபாய் தப்பியது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை தவிர அருகில் 2 ஏடிஎம்கள் உள்ளன. அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிரா பதிவுகளை கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.