×

கடலில் குளித்தபோது விபரீதம் அக்கா, தம்பி உள்பட 4 பேர் ராட்சத அலையில் மாயம்

சென்னை: கடலில் குளிக்கச் சென்றபோது, தாய் கண் முன்னே மகன், மகள் உள்பட 4 பேர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். அவர்களை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தையல் தொழிலாளி கரீம். இவரது மனைவி அசின். இவர் நேற்று காலை தனது மகள் அஃபிரின் (18), மகன் அஃபான் (16). உறவினர் கபீர் (24), அஃபானின் நண்பர் சபரி (16) உள்பட 9 பேருடன் திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே உள்ள கடற்கரைக்கு சென்றார். பெண்கள் அனைவரும் கரையில் அமர்ந்திருந்தனர்.

ஆண்கள் மட்டும் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று எழுந்த ராட்சத அலை அஃபானை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்து, கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த அஃபிரின் உடனடியாக தம்பி அஃபானை மீட்க முயற்சித்தார். ஆனால் அவரும் கடல் அலையில் சிக்கினார். உடனே கபீர் மற்றும் சபரி ஆகியோர் சேர்ந்து அஃபிரின், அஃபான் ஆகிய இருவரையும் மீட்க  முயன்றனர். எதிர்பாராதவிதமாக அவர்களையும் ராட்சத அலை  கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. தனது மகன், மகள் உறவினர் என 4 பேரும்  அடுத்தடுத்து கடல் அலையில் சிக்கியதை பார்த்து கடற்கரையில் அமர்ந்து இருந்த தாய் அசின் மற்றும் உறவினர்கள் கூச்சல் போட்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து, சற்று தூரத்தில் மீன்பிடி வலை பின்னிக் கொண்டிருந்த மீனவர்களிடம்  தெரிவித்தனர். அவர்கள் ஓடி வந்து நான்கு பேரும் கடலில் மூழ்கிய இடத்தில் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் மீரான், தீயணைப்பு வீரர்கள், மிதக்கும் படகுகளைக் கொண்டு கடலில் தீவிரமாக தேடினர். ஆனாலும் நேற்று மாலை வரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 4 பேர் ராட்சத அலையில் சிக்கி காணாமல் போனது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Vibritam Aka ,Giant wave , While bathing in the sea, perapritham, Akka, Tambi Mayam, giant wave
× RELATED மாமல்லபுரம் சுற்றுலா வந்த...