×

நாகர்கோவிலில் ஆக.21ம் தேதி ெதாடக்கம் அக்னிபாத் ஆள்சேர்ப்பு முகாமில் 36,000 பேர் பங்கேற்கின்றனர்: பதிவு செய்ய வடசேரியில் பிரமாண்ட அரங்கம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ‘அக்னிபாத்’ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க 36 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் முகாம் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் ‘அக்னிபாத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 21ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடக்கிறது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்பட 16  மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்போதே நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வெளி மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வந்து பார்வையிட்டும், பயிற்சி பெற்றும் வருகின்றனர். அண்ணா விளையாட்டு அரங்கில் ஆட்கள் தேர்வு நடைபெற்றாலும் பெயர் பதிவுகள் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்ட ஷெட்கள் போடப்படுகின்றன. ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் இதற்கான ஷெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாகர்கோவில் முகாமில்  36 ஆயிரம் பேர் அக்னி பாத் திட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் முகாமில் பங்கேற்க வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.


நள்ளிரவு முதல் அதிகாலை வரை...
நாகர்கோவில் வடசேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படும். எனவே நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் வருவதை தவிர்க்கும் வகையில் ‘அக்னிபாத்’ ஆட்கள் தேர்வு இரவு நேரத்தில் நடக்கிறது. 21ம் தேதி முதல் தினசரி இரவு 12 மணி முதல் தேர்வு தொடங்கி அதிகாலைக்குள் முடிந்துவிடும். இதனால் போக்குவரத்து பாதிப்பு, பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாது என்றும், நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் வீதம் இந்த முகாமில் பங்கேற்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Chotadakkam ,Agnipad Recruitment Camp ,Nagarkovil ,Vadseri , Nagercoil, Agnipath Recruitment Camp, Vadaseri, Grand Hall
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...