நாகர்கோவில்: நாகர்கோவிலில் ‘அக்னிபாத்’ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க 36 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில் முகாம் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் ‘அக்னிபாத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 21ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடக்கிறது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்பட 16 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்போதே நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வெளி மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வந்து பார்வையிட்டும், பயிற்சி பெற்றும் வருகின்றனர். அண்ணா விளையாட்டு அரங்கில் ஆட்கள் தேர்வு நடைபெற்றாலும் பெயர் பதிவுகள் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்ட ஷெட்கள் போடப்படுகின்றன. ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் இதற்கான ஷெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.