சென்னை: காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கம் சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, உளவுத்துறை எஸ்.பி. சரவணன் உள்பட தமிழகத்தை சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காவல் துறையில் தனிச் சிறப்புடன் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி பதக்கம் வழங்குவது வழக்கம்.
அதன்படி நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக காவல்துறையில் ஜனாதிபதியின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கம் சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்த 24 காவல் அதிகாரிகளை தேர்வு செய்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதியின் பாராட்டத்தக்க பணிக்காக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, சிபிசிஐடி எஸ்பியாக உள்ள முத்தரசி, சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள நாகஜோதி, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர், சென்னை சைபர் க்ரைம் பிரிவு கண்காணிப்பாளர் சண்முக பிரியா, சென்னை மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், சென்னை எஸ்பிசிஐடி -II (உளவுத்துறை) கண்காணிப்பாளர் சரவணன்.
புதுக்கோட்டை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பி ராஜேந்திரன், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு உதவி கமிஷனராக உள்ள வேல்முருகன், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை முதன்மை அதிகாரியாக உள்ள டிஎஸ்பி சவரிநாதன், சென்னை மெட்ரோ-II சிபிசிஐடி டிஎஸ்பி புருஷோத்தமன், சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ஜெயதுரை ஜான் கென்னடி,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டிஎஸ்பி தனராசு, சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி கவுதமன், சேலம் நகர நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர் சரவணன், கன்னியாகுமரி தக்கலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதேசன், சென்னை மாநகர யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் வீரகுமார், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி இன்ஸ்பெக்டர் சுப்புரவேல், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங்.
மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இன்ஸ்பெக்டர் சூரியகலா, ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை-5 இன்ஸ்பெக்டர் பவுல் பாக்கியராஜ், சென்னை குற்றப்புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன், தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளி உதவி ஆய்வாளர் செல்வராஜ், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணி தங்கராஜ் ஆகியோருக்கு உயரிய விருதான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.