×

சுதந்திர தின விழாவில் பயங்கரவாத சதியா? இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் கைது: ஐதராபாத், நேபாளத்தில் இருந்து உதவிய வாலிபர்கள்

திருமலை: இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வந்த இளம்பெண், நேற்று முன்தினம் இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது எல்லை பாதுகாப்பு வீரர்கள் கைது செய்தனர். அவருடன் வந்த ஐதராபாத், நேபாளத்தை சேர்ந்த வாலிபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் உளவுத்துறை விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் பகதூர்பூர் பகுதியை சேர்ந்தவர் அகமது (30). இவர் சவுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார்.

அகமதுக்கு தனது பணி ஓய்வு நேரத்தில் சமூக வளைத்தளம் மூலம் பாகிஸ்தான் பைசலாபாத்தை சேர்ந்த கதிஜாநூர் (26) என்ற இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஐதராபாத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இது குறித்து அகமது ஐதராபாத்தில் உள்ள தனது சகோதரர் முகமதுக்கு தெரிவித்துள்ளார். இதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த கதிஜாநூர், ஐதராபாத்தை சேர்ந்தவர் என போலியாக ஆதார் அட்டையை முகமது தயாரித்துள்ளார்.
பின்னர், பாகிஸ்தானில் இருந்து இளம்பெண்ணை நேபாளம் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வர திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக, அகமது தன்னுடன் ஓட்டலில் பணிபுரிந்த நேபாளத்தை சேர்ந்த   நண்பர் ஜீவனின் உதவியை நாடியுள்ளார்.

இவர்கள் பாகிஸ்தானில் இருந்து சவுதிக்கு கதிஜாநூரை வரவழைத்தனர். பின்னர், இருவரும் நேபாளம் வந்துள்ளனர். அங்கு ஜீவனை சந்தித்த பிறகு மூவரும் இணைந்து நேற்று முன்தினம் பீகார் வழியாக இந்தியாவுக்குள் வர முயன்றுள்ளனர். அப்போது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், கதிஜாநூரின் ஆதார் அட்டையை சோதனையிட்டனர். இதில், போலி ஆதார் அட்டை என்பது தெரியவந்தது. இவர்களிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், திருமணம் செய்து கொள்ள ஐதராபாத் செல்லவே போலி ஆதார் அட்டை தயாரித்து வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், நாட்டில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பயங்கரவாத சதித்திட்டத்துடன் இவர்களின் பின்னணியில் தீவிரவாத இயக்கம் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் கதிஜாநூர், ஜீவன் மற்றும் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Independence Day ,India ,Hyderabad , Is Independence Day a terrorist plot? Pakistani Teen Arrested For Trying To Enter India: Youths Helped From Hyderabad, Nepal
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!