×

இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பம்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, ‘இந்திய விளையாட்டுத் துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பமாகும்,’ என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 4வது இடத்தை பிடித்து அசத்தியது. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லியில் பிரதமர் மோடி நேற்று நேரில் பாராட்டு தெரிவித்தார்.

அப்போது, வீரர், வீராங்கனையுடன் பேசிய அவர் கூறியதாவது: நமது வீரர், வீராங்கனைகளின் செயல்திறனின் உண்மையான மதிப்பீட்டை வெறும் பதக்கங்களின் எண்ணிக்கையை கொண்டு செய்து விட முடியாது. அவர்கள் மிகவும் கடுமையாக போட்டியிட்டனர். இன்னும் அதிகமான பதக்க வேட்டைக்கு, 1 நொடி, 1 செமீ வித்தியாசம் இருந்திருக்கலாம். ஆனால், நாங்கள் அதையும் விரைவில் எட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது ஒரு ஆரம்பம். இனி நாங்கள் அமைதியாக உட்காரப் போவதில்லை. இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் எட்டப் போகிறது. பாட்மின்டன், மல்யுத்தம், பளுதூக்குதல் போன்ற ஏற்கனவே இந்தியா வலுவாக உள்ள விளையாட்டுக்களைத் தவிர, புதிய விளையாட்டுப் பிரிவிலும் வலுவடைந்து வருகிறோம். புதிய விளையாட்டுக்களிலும் நம் வீரர்கள் முத்திரை பதித்துள்ளனர். ஹாக்கியில் நமது பாரம்பரியத்தை மீட்க முயற்சிக்கிறோம். விளையாட்டு வீரர்களின் சாதனைகள் நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* செஸ் வீரர்களுக்கு பாராட்டு
காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.


Tags : PM Modi , Indian sports industry's golden age to begin soon: PM Modi hopes
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!