×

கல்வி, மருத்துவத்துக்காக செலவு செய்வது இலவசம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மக்களின் கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது இலவசம் ஆகாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை, கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது: கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2.11.2021ம் நாள் தொடங்கி வைத்தேன். பி.காம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய நான்கு பாட பிரிவுகளுடன் தொடங்கப்பட்டது. 3.12.2021 அன்று சைவ சித்தாந்தம் சான்றிதழ் படிப்பிற்கான புதிய வகுப்பு 100 மாணவர்களுடன் தொடங்கி வைக்கப்பட்டது. முதலாம் ஆண்டிலேயே 220 மாணவர்கள் சேர்ந்தார்கள். தற்போது மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறைவு பெற்று பல்கலைக்கழக தேர்வுகளும் முடிவுற்று, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்.

இந்த கல்வியாண்டில் ஏற்கனவே இருக்கக்கூடிய நான்கு பாட பிரிவுகள் மட்டுமில்லாமல் புதிதாக பிஏ சைவ சித்தாந்தம் என்ற பாட பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு கல்வியானது இன்று முதல் தொடங்குகிறது. இதனை தொடக்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணமின்றி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு” என்று உச்ச நீதிமன்றமே  தீர்ப்பளித்துள்ளதை நீங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக நாட்டில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனென்றால் அது அறிவு நலம் சார்ந்தது கல்வி, உடல் நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான  அளவுக்கு மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. இலவசம் என்று சொல்லுகிறபோது நீங்கள் இதைத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இல்லம் தேடிக் கல்வி, கல்லூரி கனவு, நான் முதல்வன், பள்ளி பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி, மக்களை தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலத் திட்டங்களாக உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இவை எல்லாம் இலவச திட்டங்கள் அல்ல, சமூக நலத் திட்டங்கள் ஆகும்.

மாணவச் செல்வங்களுக்கு நான் சொல்ல இருப்பது  மூன்றே மூன்று தான். முதலில் படிப்பு, இரண்டாவதும் படிப்பு, மூன்றாவதும் படிப்பு. உங்களது படிப்பில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு ஆர்வமான தனித்திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு பட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியை தொடருங்கள். குறிப்பாக பெண்கள், பட்டம் வாங்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தகுதியான பணிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும். பொருளாதார ரீதியாக சொந்த காலில் நிற்கும் தன்னம்பிக்கையை பெண்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,M.K.Stal , Spending on education, medicine is not free: Chief Minister M. K. Stalin's speech
× RELATED செல்பி எடுத்தாலும் கட்டணுமா? ஜிஎஸ்டி...