×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் கலெக்டர்கள் ராகுல்நாத், ஆர்த்தி அறிவிப்பு

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்கு ரேஷன் கார்டு குறைத்தீர் கூட்டம் நடக்க இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இக்குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆகஸ்ட் 2022 மாதம் 13.8.2022ம் தேதி இன்று (இரண்டாவது சனிக்கிழமை) காலை 10 மணிக்கு வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

வட்டத்தின் பெயர் குறைதீர் முகாம் நடைபெறவுள்ள கிராமத்தின் பெயர் விவரம்: 1 செங்கல்பட்டு வட்டத்தில் ஆப்பூர், 2 செய்யூர் வட்டத்தில் தேன்பாக்கம், 3 மதுராந்தகம் வட்டத்தில் கடமலைபுத்தூர், 4 திருக்கழுக்குன்றம் வட்டத்தில் பொன்விளைந்தகளத்தூர், 5 திருப்போரூர் வட்டத்தில் இல்லலூர், 6 வண்டலூர் வட்டத்தில் புதுப்பாக்கம் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளன. இந்த இடங்களில் நடக்கும் குறைதீர் முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கேட்டுக்கொள்கிறார். இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் வட்டத்தில் முசரவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ஒழையூர், வாலாஜாபாத் வட்டத்தில் கட்டவாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சந்தவேலூர், குன்றத்தூர் வட்டத்தில் அய்யப்பன்தாங்கல் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். குறைதீர் கூட்டம் நடைபெறும் இடங்களில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் தொிவித்துள்ளார்.

Tags : Chengalpattu ,Kanchipuram ,Rahul Nath ,Aarti , Ration card grievance meeting in Chengalpattu and Kanchipuram districts today Collectors Rahul Nath, Aarti announcement
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...