உத்திரமேரூர்: நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினவிழாவினை அமுதவிழாவாக கொண்டாட அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில், அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் இன்று 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தேசியக் கொடி ஏற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து குறும்படம் மூலம் விளக்கமளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான தேசிய கொடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்வின்போது, உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதாஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், வரதராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.