உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவனூர்புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (55). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் உத்திரமேரூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் காவனூர்புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். காவனூர்புதுச்சேரி கூட்ரோடு அருகே வந்தபோது எண்டத்தூர் பகுதியிலிருந்து 3 பேருடன் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக காந்தி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காந்தி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். எதிரே வந்த மர்ம நபர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. உடனே அப்பகுதி மக்கள் காயமடைந்த காந்தியினை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காந்தி நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.