சென்னை: தொடர் விடுமுறையையொட்டி 610 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துத் துறை அதிகாரி கூறியதாவது: பண்டிகை, விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சிரமமின்றி தங்களுடைய ஊர்களுக்கு செல்லும் வகையில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதலாக 610 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று 425 பேருந்துகளும், இன்று 125 பேருந்துகளையும் இயக்க அறிவுறுத்தியுள்ளோம். மேலும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், கூடுதல் பேருந்துகளையும் தயாராக வைத்திருக்குமாறு மண்டல பொறுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நெரிசலின்றி பயணிக்க முடியும். போக்குவரத்து நெரிசலிலும் சிக்காத வண்ணம் பேருந்துகளைக் கையாள நிலைய அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளோம். பொதுமக்கள் tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். இவ்வாறு போக்குவரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.