சென்னை: தியாகிகளின் மனைவிக்கு பிறகு, அடுத்த சந்ததியரை இரண்டாம் வாரிசாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தினம் நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, தன்னலம் மறந்து பொது நலத்தோடு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. அவர்கள் என்றும் போற்றப்படக் கூடியவர்கள். இந்நிலையில் தியாகிகளின் மனைவிக்குப் பிறகு அவர்களின் அடுத்தபடியாக உள்ள சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று வாரிசுதார்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. மாநில அரசு ஏற்கனவே இருக்கின்ற விதிமுறைகளை தளர்த்தி, உரிய பரிசீலனை செய்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.