திருவள்ளூர்: பைக்கில் சென்றபோது தாயின் மடியில் இருந்து தவறிவிழுந்த 7 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா(29). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி முத்தமிழ் ( 26). இவர்களுக்கு ஜோசன் (3) மகன் உள்ளார். மேலும் இவர்களுக்கு லூவி டெரினா என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த மாதம் 27ம் தேதி, குணா மனைவி, குழந்தைகளுடன் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதுவதற்காக பைக்கில் திருவள்ளூர் அருகே கே.ஜி. கண்டிகை மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றனர். தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் வீடு நோக்கி வந்தனர்.
திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் புற்றுக்கோயில் சாலையில் உள்ள வளைவில் திரும்பும்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது முத்தமிழ் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது. உடனடியாக குழந்தையை பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு பெண் குழந்தை லூவிடெரினா பரிதாபமாக இறந்தது. இதுபற்றி திருவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.