கரூர்: கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை போதை ெபாருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதன்பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:
நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்பிக்கள் கடுமையாக எதிர்த்ததால் தற்போது நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க, அங்கும் இந்த மசோதாவை வாபஸ் பெற திமுக போராடும்.
மின்சார சட்ட திருத்த மசோதாவால் விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பாதிக்கப்படும். மேலும் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சார திட்டமும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். மின்வாரிய கட்டமைப்புகளை தனியார் பயன்படுத்தும் நிலை உருவாகும் என்றார்.