கரூர்: கரூர் சர்ச் கார்னர் அருகே நேற்று 3 மாணவிகள் ரோட்டில் மயங்கிய நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த, இந்த பகுதியினர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்த போது, மாணவிகளில் ஒருவர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் 2 மாணவிகளை ஏற்றிச்சென்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் 2 மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவியையும் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், மாணவிகள் மூவரும் கரூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்தனர். இதனால் மறு தேர்வு எழுத பள்ளி சீருடையுடன், நேற்று வேறொரு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு, 3 பேரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
அப்போது, ஒயின் குடித்தால் நல்ல கலராக மாறலாம் என யாரோ சொன்னதை மனதில் வைத்து, தெரிந்தவர்கள் மூலம் ஒயினை வாங்கி மாணவிகள் குடித்துள்ளனர். ஒயினில் போதை இருக்கும் என்பது தெரியாமல் குடித்து விட்ட அவர்கள் மூவரும் சர்ச் கார்னர் பகுதிக்கு வந்து மயங்கிய நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை சொல்லி அவர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.