சென்னை: செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், விருந்தோம்பல் மற்றும் சுயமரியாதை ஆகியவை தமிழர்களின் பிரிக்க முடியாத குணாதிசயங்கள். செஸ் ஒலிம்பியாட் போன்று சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழ்நாடு அரசை ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார்.
இது தொடர்பாக தமிழில் அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் என்று பதிவிட்டிருந்தார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற இந்திய பி, இந்திய ஏ (மகளிர்) அணிகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.