புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் நிதி குறைப்பு, பட்ஜெட் அனுமதிக்கு காலதாமதம் உள்ளிட்ட பலவேறு காரணங்களால் மார்ச் மாதம்இடைக்கால பட்ஜெட், ஆகஸ்ட் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலை ஏற்படுகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நேற்று கூடியது. கவர்னர் தமிழிசை உரையாற்றினார். எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில், திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். கவர்னர் தமிழிசை பேசும்போது, திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுந்து நின்று பட்ஜெட்டுக்கு ஏன் அனுமதி வாங்க முடியவில்லை என கேள்வி எழுப்பினர்.
பின்னர் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த அவர்கள் கவர்னர் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர். கவர்னர் உரையாற்றி முடிந்ததும், சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பின்னர் சபாநாயகர் அளித்த பேட்டியில், அரசின் முழுமையான நிதிநிலை அறிக்கையை முதல்வர் விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறார். ஒன்றிய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க 75ம் ஆண்டு சுதந்திரதின பெருவிழாவுக்காக 11, 12 ம்தேதி சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்ெஜட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற காரணத்தால் சபை ஒத்திவைக்கப்படவில்லை என்றார்.