சென்னை: ஆதார் எண்ணை பி.எம்.கிசான் வலைதளத்தில் புதுப்பிக்க வேண்டும் என உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ‘பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூபாய் 6,000 மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணை தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். எனவே, அனைத்து பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் www.pmkisan.gov.in < http://www.pmkisan.gov.in > என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் ஒ.டி.பி. பெற்று அதைப் பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.