×

பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா: ராகுலுக்கும் உடல்நிலை பாதிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு 2வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த மாதம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இந்த மாதமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதை கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். சோனியாவிடம் விசாரணை நடந்தபோது ராகுலும் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இது குறித்து பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து மருத்துவ விதிமுறைகளையும் கடைப்பிடிக்கிறேன்,’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரியங்காவுக்கு கடந்தாண்டு ஜூன் மாதமும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தவிர, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் பவன் கேரா, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பி.யுமான அபிஷேக் சிங்விக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கும் உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, தனது ராஜஸ்தான் மாநில பயணத்தை ராகுலும் ரத்து செய்துள்ளார்.

Tags : Priyanka Gandhi ,Rahul , Priyanka Gandhi again infected with Corona: Rahul too is ill
× RELATED தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது...