×

பேய் பிடித்திருப்பதாக மந்திரவாதி கூறியதால் 5 வயது மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்: மூடநம்பிக்கையால் மகாராஷ்டிராவில் சோகம்

நாக்பூர்: பேய் பிடித்திருப்பதாக மந்திரவாதி கூறியதால் தங்களது 5 வயது மகளை பட்டினி போட்டு கொன்ற பெற்றோர் மீது மகாராஷ்டிரா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் மந்திரவாதியான சாமியாரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் சுபாஷ் நகரை சேர்ந்த சித்தார்த் பிரலாத் சிமானே (45) என்பவர், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் யூடியூப் சேனல் நடத்தி வந்தார். அதன்மூலம் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு குறித்த ஆலோசனைகளை வழங்கி வந்தார். இவரது மனைவி ரஞ்சனா (41); அவரது உறவினர் பிரியா அமர் பன்சோத் (35). சித்தார்த் பிரலாத் சிமானே - ரஞ்சனா தம்பதியருக்கு 5 வயதில் அனாக்‌ஷி என்ற பெண் குழந்தை உள்ளது.

அந்த குழந்தைக்கு கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிரியா அமர் பன்சோத், தனக்கு தெரிந்த மந்திர தந்திர வேலைகளை செய்யும் சாமியார் நம்தேவ் பாம்போடே (50) என்பவரிடம் தம்பதியரை அழைத்து சென்றார்.  அந்த சாமியார், குழந்தைக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், அதற்கான பரிகாரம் என்ன? என்று சாமியாரிடம் கேட்டனர். அவர் கூறியபடி பேயை விரட்டுவதற்கான பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், அவர் கொடுத்த வெள்ளை நிறக் கயிற்றை வீட்டை சுற்றிலும் கட்டினர். வெள்ளை நிறக் கயிறு கட்டிய விஷயம், மேற்கண்ட மூன்று பேர் தவிர பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு கூட தெரியக் கூடாது என்று சாமியார் கூறியுள்ளார்.

மேலும் தம்பதியின் 5 வயது மகளுக்கு எவ்வித உணவும் கொடுக்கக் கூடாது என்று சாமியார் கூறியதால், அந்த குழந்தைக்கு உணவு ஏதும் கொடுக்காமல் பட்டினிபோட்டனர். ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை, பட்டினியால் மயக்கமடைந்த நிலையில் இறந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தை அனாக்‌ஷியை அம்பாசாரி சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

பின்னர் சாமியாரிடம் சென்று தங்களது குழந்தை இறந்த விவகாரம் குறித்து தெரிவித்தனர். அதற்கு அவர் அலட்சியத்துடன் பதில் அளித்தார். அதையடுத்து அவர்கள் சாமியார் மீது பிரதாப்நகர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி நம்தேவ் பாம்போடேவை கைது செய்தனர். மூடநம்பிக்கையால் சிறுமியின் மரணத்திற்கு காரணமான தந்தை, தாய், உறவினர் ஆகிய மூவர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Maharashtra , Witch starves 5-year-old daughter to death, superstition
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...