×

திருவண்ணாமலை அருகே பரிதாபம்; 6 வயது மகள் அடித்து கொலை: தாய் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வீட்டில் கூச்சலிட்டபடி விளையாடிய 6 வயது மகளை சமாதானம் செய்தும் கேட்காததால் அவரது தாய் கரும்பால் அடித்துள்ளார். இதில் சிறுமி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது தாயை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (38). சாலை அமைக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா (30). இவர்களது மகன் பிரசன்னதேவ் (8), மகள் ரித்திகா (6). இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளில் படித்து வந்தனர்.

இந்நிலையில் பூபாலன், சுகன்யா இடையே கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சுகன்யா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விடுவாராம். அவரை பெற்றோர் சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழ அனுப்பி வைப்பார்களாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலன் சாலை அமைக்கும் பணிக்காக தேனி மாவட்டத்திற்கு சென்றுவிட்டாராம்.

நேற்று விடுமுறை என்பதால் பிரசன்னதேவ், ரித்திகா வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ரித்திகா அதிகமாக சத்தம் போட்டுள்ளார். சுகன்யா, பலமுறை எச்சரித்தும் ரித்திகா கேட்கவில்லையாம். ஆத்திரமடைந்த சுகன்யா, அருகில் இருந்த கரும்பை எடுத்து ரித்திகாவை அடித்துள்ளார். தலையின் பின்பகுதியில் அடி விழுந்தததால் ரித்திகா மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த சுகன்யா, ரித்திகாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுார். ஆனால் வழியிலேயே ரித்திகா பரிதாபமாக இறந்துள்ளார். இதனால் கதறி அழுத சுகன்யா, மருத்துவமனைக்கு செல்லாமல் ரித்திகாவின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டார். பின்னர் கணவர் மற்றும் உறவினர்களுக்கு பயந்து ரித்திகாவின் சடலத்தை கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டாராம்.

தகவலறிந்து பூபாலன் விரைந்து வந்து மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். பின்னர் வெறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து, ரித்திகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சுகன்யாவை கைது செய்தனர். பின்னர் அவரை, திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tiruvannamalai , Pity near Tiruvannamalai; 6-year-old daughter beaten to death: mother arrested
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...