நீலகிரி: நீலகிரியில் தொடரும் கனமழையால் மாயாற்றில் ஐந்தாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெப்பக்காடு தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம் காரணமாக மசினகுடியிலிருந்து கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. எட்டாவது நாளாக இடைவிடாமல் இன்றும் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஐந்தாவது நாளாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தெப்பக்காடு தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் ஊட்டியில் இருந்து மசினகுடி வழியாக கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் சாலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் மசினகுடி, மாயார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக கூடலூர் மற்றும் மைசூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மாயார் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் காரணமாக, தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்க்கப்படும் யானைகளை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழங்குடிகள் மக்கள் சுற்றுலா பயணிகள் மாயாறு ஆற்றின் அருகே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.