சின்னமனூர் : சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைகிராமங்களில் தொடர் மழையின் காரணமாக ஐந்து அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளதால் சுருளி மின் நிலையத்திற்கு கூடுதல் மின்சாரம் தயாரிக்க அச்சாரம் அதிகரித்துள்ளது.சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை வரிசையில் ஹைவேவிஸ் பேரூராட்சியை தலைமையாக கொண்டு மேகமலை, மணலார், மேல் மணலார், வெண்ணியார், மகாராஜன் மெட்டு என ஏழு மலை கிராமங்கள் உள்ளன, தொடர்ந்து மேகமலை பகுதிகளில் கடனா, அந்துவான், ஆனந்தா, கலெக்டர் கார்டு என கூடுதல் காப்பி விவசாயமும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் மேகமலையை, வனச்சரணலாயமாக அறிவித்துள்ளது. இதனால் 1.50 லட்சம் ஏக்கர் அளவில் பாதுகாக்கப்பட்ட வனத்தில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான், பாம்பு, சிங்கவால் குரங்கு, கரடி உள்ளிட்ட விலங்கினங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. தென்பழனி மலை அடிவாரத்தில் இருந்து 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் இந்த ஹைவேஸ் மலைச்சாலை அமைந்துள்ளது.
இந்த ஏழு மலை கிராமங்களுக்குள் இயற்கையாகவே ஏரிகள் பல கிலோமீட்டர் கணக்கில் உள்ளது. இதை பயன்படுத்தும் விதமாக கடந்த 1978ம் ஆண்டு ஹைவேவிஸ், தூவானம், மணலார், வெண்ணியார், இரவங்கலார் என ஐந்து அணைகள் கட்டப்பட்டு தண்ணீரை வீணாக்காமல் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்த அணைகளை சுற்றி ஏரிகள் மெகா நீளமாகவும், அகலமாகவும் இருப்பதால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தமிழக பகுதி இரவுங்கலாரை ஒட்டி கேரளா மாநில பருவ கால சீசனும் இங்கு தொடர்வதால் எட்டு மாதமும் மழை பெய்யும்.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதால் இந்த ஐந்து அணைகளிலும் வெகு வேகமாக தண்ணீர் தேங்கி முழுமை அடைந்துள்ளது.
வெண்ணியர் மணலார் இரு அணை யில் இருந்து பம்பிங் மூலம் ஹைவேஸ் அணையில் நிரப்பப்பட்டு அங்கிருந்து தூவானம் ஏரி மற்றும் அணைக்கு சேர்க்கப்பட்டு வருடம் முழுவதுமே தேக்கப்படுவதால் அதிலிருந்து மறுகால் பாயும் தண்ணீர் கம்பம் அருகே உள்ள சுருளி தீர்த்தத்திற்கு அருவியாக தீர்த்தமாக விழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நான்கு அணைகளிலிருந்து பம்பிங் மூலம் சுரங்க பாதையின் வழியாக 7வது மலைகிராமத்தில் உள்ள இரவங்கலார் அணை மற்றும் ஏரியில் குறைய, குறைய நிரப்பும் போது மகாராஜன் மெட்டு வழியாக ஒற்றை குழாயின் வழியே லோயர் கேம் அருகில் உள்ள சுருளி மின்நிலையத்திற்கு அனுப்பப்பட்டு நாள் ஒன்றுக்கு 35 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.தற்போது தொடர் மழையால் அதிகளவில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கூடுதல் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு அச்சாரமாக அமைந்துள்ளது.