நீலகிரி: உதகையில் தொடர் மழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாகாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மசினகுடி- கூடலூர் இடையே 2வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பைக்காரா மற்றும் கிளன்மார்கன் அணைகளில் இருந்து மாகாற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மசினகுடி- கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தெப்பக்காடு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அவவழியே செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உதகையில் இருந்து பாலாடா வழியாக ஓசைடி செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு அதில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. அந்த காட்சிகளை வாகனஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து உள்ளனர். அவலாஞ்சி, மேல் பவானி, எமரால்டு போன்ற பகுதிகளில் மழைதொடர்ந்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமாக செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.