திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப் பெரியாறு, இடுக்கி, மலம்புழா, தென்மலை உள்பட அனைத்து அணைகளும் அதன் கொள்ளளவை நெருங்கின. இதைத் தொடர்ந்து, படிப்படியாக ஒவ்வொரு அணைகளாக திறக்கப்பட்டன. முல்லைப் பெரியாறு, இடுக்கி அணைகளின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன.மலம்புழா, தென்மலை, பொன்முடி, கல்லார் உள்பட 26 அணைகள் இதுவரை திறக்கப்பட்டு உள்ளன.
இதனால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்ட போதிலும், இன்னும் பலர் கரையோர பகுதிகளில் வசித்து வருகின்றனர். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்போது அவர்கள் கடும் பீதியில் உள்ளனர். அந்த பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.