×

சாஸ்த்ரா பல்கலை.யின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வரவேண்டும் என மக்கள் எதிர்ப்பு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை:  தஞ்சாவூர் சாஸ்த்ரா  நிகர்நிலை பல்கலை உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், 35 ஆண்டுகளாக அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு  நிலத்தில் இருந்து நான்கு வாரங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த உத்தரவை ரத்து  செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு  தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில், அரசு நிலத்துக்கு பதிலாக  நிலத்தை மாற்றிக் கொள்ள வகை செய்யும் வகையில் கடந்த மே மாதம் அரசு  அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி மாற்று இடம் வழங்க அனுமதி கோரி அரசுக்கு  விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்த அரசு தரப்பு  கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அது  பொதுவான அரசு உத்தரவு. இவர்களுக்கு பொருந்தாது. சாஸ்த்ரா பல்கலை  நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளது என்றார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு  வந்தபோது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, 50 அல்லது 100 சதுர அடி கொண்ட சிறிய ஆக்கிரமிப்புகளை அகற்ற  அதிகாரிகள், செல்லும்போது, முதலில் சாஸ்த்ரா பல்கலையின் 33 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு, வாருங்கள் என்று மக்கள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு  தெரிவிக்கிறார்கள்.

மக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை என்று  தெரிவித்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,  நீதிபதி மாலா அமர்வு, சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலத்தில் நீர்நிலைகள்  உள்ளதா என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு  விசாரணையை 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். வழக்கு முடியும்வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் ஆவணமாக ஐகோர்ட் வசம் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags : Shastra University ,ICourt , People's protest to remove the encroachment of Shastra University: Govt information in ICourt
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...