×

50, 100 சதுர அடி ஆக்கிரமிப்பை அகற்ற செல்லும்போதெல்லாம் சாஸ்த்ரா பல்கலையின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வாருங்கள் என்று பொதுமக்கள் எதிர்ப்பு

சென்னை: ஐம்பது அல்லது 100 சதுர அடி ஆக்கிரமிப்புகளை அகற்ற  செல்லும்போதெல்லாம், முதலில் சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் 33 ஏக்கர் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வாருங்கள் என்று மக்கள் எதிர்ப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையை செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை அரசு நிராகரித்தது. இதையடுத்து, நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில், அரசு நிலத்துக்கு பதிலாக நிலத்தை மாற்றிக் கொள்ள வகை செய்யும் வகையில் கடந்த மே மாதம்  தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி மாற்று இடம் வழங்க அனுமதி கோரி அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு  கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அது பொதுவான அரசு உத்தரவு. இவர்களுக்கு பொருந்தாது. சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளது என்றார்.

 வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, தனியார் கல்வி நிறுவனங்களுடன் நிலங்களை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் தமிழக அரசின் உத்தரவு, சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்குப் பொருந்தாது என்றும் மேலும் அவர்கள் அதை உரிமையாக கோர முடியாது என்றும் மீண்டும் தெரிவித்தார். மேலும், 50 அல்லது 100 சதுர அடி கொண்ட சிறிய ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள், செல்லும்போது, முதலில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 33 ஏக்கர் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு, வாருங்கள் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

 வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத்பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு, சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலத்தில் நீர்நிலைகள் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், வழக்கு முடியும்வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் ஆவணமாக உயர் நீதிமன்றத்தின் வசம் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags : Sastra ,University , Removal of occupation, Shastra University, public protest
× RELATED ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கைக்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு