சென்னை: இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள நெருங்கிய உறவு வளர்ந்தும் விரிவடைந்து வருகிறது என்று இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார் கூறினார். அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ராணுவ தளவாட கப்பலான சார்லஸ் ட்ரூ காட்டுபள்ளியில் முகாமிட்டுள்ளது. சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் கட்டும் தளத்திற்கு வந்தடைந்த இந்த கப்பலை பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார்
நேற்று நேரில் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் பேசியதாவது: அமெரிக்க கடற்படைக்காக சமீபத்தில் எல் & டி நிறுவனம் புதிய கப்பலை கட்டி வழங்கியது. இரு தரப்பிலும் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் 2 தடவை நடந்த பேச்சுவாத்தைக்கு பிறகே, அமெரிக்க கடற்படை கப்பல்களை இந்தியாவில் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதன் பேரில் அமெரிக்க கடற்படை கப்பல் எல் & டி கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு முதல்முறையாக இந்தியா மற்றும் தமிழகத்திற்கு வந்துள்ளது. இது இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள நெருங்கிய உறவு வளர்ந்து வருவதையும், விரிவடைவதையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.