பொன்னேரி: பொன்னேரி அருகே வேன் மோதி பைக்கில் சென்ற இருவர் பலியாகினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பூவாமை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆண்டி (55), ஆண்டியப்பன் (40). இருவரும் நேற்று பொன்னேரிக்கு சென்று வீட்டிற்கு பைக்கில் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற மினி வேன், மெதூர் பாரத் நகர் மின்வாரிய அலுவலகம் எதிரே பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் பைக்கில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் இறந்த ஆண்டி மற்றும் ஆண்டியப்பன் சடலங்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வேனை பறிமுதல் செய்து, பூவாமை கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராமுவை (40) கைது செய்து விசாரிக்கின்றனர்.