புதுக்கோட்டை: புதுக்கோட்டை புத்தக திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 10 படைப்பாளர்களுக்கு இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு பேசியதாவது: தன்னை சந்திக்க வருவோர் புத்தகங்களை மட்டும் வழங்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எங்களின் மாணவர் பருவத்தில் புத்தகங்களை படிக்க சிரமப்படுவோம். நூலகத்தில் சில நூல்களை தேடி வைத்தால், மறுநாள் வேறொருவர் எடுத்து படித்து கொண்டிருப்பார். சிறையில் சிறைவாசிகளுக்கு செய்தித்தாள்கள் வழங்க வேண்டும் என்பதையும், சிறைவாசிகளுக்கு புத்தகங்களை வாசிக்க வழங்க வேண்டும் என்பதையும் நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு தான் பெற்றுத்தர முடிந்தது.
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தை திறப்பதற்கு முன்பே மாணவர்கள் கூடி நிற்பர். அத்தனை முக்கியமான நூலகத்தை மாற்றி மருத்துவமனையாக்க முயற்சித்தனர். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பர். நான் நீதிபதியாக இருந்தபோது அந்த முடிவுக்கு இடைக்கால தடை விதித்தேன். கருத்து பெட்டகத்தை மூடுவார்கள் என்றால் அது பாசிசம். இணையதள தகவல் புரட்சி ஏற்பட்டுள்ள இந்த காலத்தில் அச்சிட்ட நூல்கள் என்னவாகும் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. இந்தநிலையில் நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்குவதற்காக தமிழ்நாடு முதல்வர் எடுத்த நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.