திருவலம் : திருவலம் பொன்னையாற்றில் பரவலாக திடீர் வெள்ளம் பாய்ந்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. காட்பாடி தாலுகா திருவலம் பொன்னையாற்றில் ஆந்திராவில் பெய்யும் மழை நீரானது வரப்பெறும்.
இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரா இரும்பு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்
காக பயன்படுத்தி வருகின்றனர். இப்பாலம் பல்வேறு திரைப்படங்கள், சின்னதிரைகளில் இடம் பெற்றுள்ளது. இப்பாலத்தினை தலைவர்கள், பல்வேறு மாநிலம், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நாள்தோறும் பார்த்து ரசித்து செல்கின்றனர். இதன் கரையோரம் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க திருவலம் தனுமத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளதும்,
கோயில் ராஜகோபுரம் மற்றும் உட்பிரகாரத்தில் உள்ள மூலவர், அம்மன், நடராஜர் சன்னதிகளின் கோபுரங்கள் பாலத்தில் இருந்து பார்ப்பதற்குமிக கம்பீரமாக காட்சியளிக்கும்.
மேலும் பொன்னையாற்றில் ஏற்படும் வெள்ளநீரானது இரும்பு பாலத்தின் மேலிருந்து பார்த்து ரசிப்பதற்கும் மிக ரம்மியாக காட்சியளிக்கும்.
இந்நிலையில் கடந்த 1990ம் ஆண்டு ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரும்பு பாலத்தின் அடிப்பகுதியினை தொட்ட வண்ணம் சென்று பிரமாண்டமாக காட்சியளித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பொன்னையாற்றில் நேற்று காலை முதல் ஆங்காங்கே பரவலாக வெள்ள நீரானது ஆற்றின் இருக்கரைகளிலும் பாய்ந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியினர் மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்தவர் மகிழ்ச்சியடைந்தனர்.