மும்பை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22 வரை சிறையில் அடைக்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.யை கடந்த 1-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறை காவலை வருகிற 8-ந் தேதி வரை நீட்டித்து மும்பை கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அமலாக்கப்பிரிவு காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து மும்பை நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் ராவத்தை ஆகஸ்ட் 22 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.