சென்னை: சென்னை ஆலந்தூரில் பெயர் பலகை விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுநர் ரகுநாத் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பரங்கிமலையில் இருந்து ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரெயில் நிலைய மாநகர பேருந்து நிறுத்தம் பகுதிக்கு செல்ல சாலை வளைவில் திரும்பியபோது, அதிவேகமாக வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பேருந்து, சாலை வளைவு பகுதியில் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்டு இருந்த வழிகாட்டி பெயர் பலகை ராட்சத இரும்பு தூண் மீது பயங்கரமாக மோதியது.
மாநகர பேருந்து மோதியதில் பெயர் பலகையுடன் ராட்சத தூண் சரிந்து சாலையின் குறுக்கே இருபக்கமுமாக விழுந்தது. அப்போது கிண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், மற்றும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற மினிவேன் மீது வழிகாட்டி பெயர் பலகை விழுந்தது. வழிகாட்டி பெயர் பலகைக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமணையில் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சண்முக சுந்தரம் உயிரிழந்தார். சண்முக சுந்தரம் உயிரிழந்ததை அடுத்து போலீசார், அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மாநகர பேருந்து ஓட்டுநர் ரகுநாத்தை கைது செய்துள்ளனர்.