டெல்லி: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜக.வுடன் இணைந்து கடந்த ஜூன் 30-ம் தேதி புதிய அரசை ஆட்சியில் அமர்த்தினர். மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும் பதவியேற்றனர். ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாவதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அஜித் பவார் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறுகிறார். கடந்த காலத்தில் அவர்களின் ஆட்சியில் 32 நாட்களுக்கு வெறும் 5 அமைச்சர்கள் மட்டுமே ஆட்சி பொறுப்பில் இருந்ததை அஜித் பவார் மறந்து விட்டார். எனவே நீங்கள் கற்பனை செய்வதற்கு முன்பாகவே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கூறினார்.
இந்நிலையில் வரும் 15-ம்தேதிக்குள் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். மேலும் 15 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக்கம் செய்யப்படும் அமைச்சரவையில், உள்துறை தேவேந்திர பட்னாவிஸ் வசமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.