ஈரோடு: ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை பிரசாத் மருத்துவமனை உள்ளிட்ட 4 மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதையடுத்து, சுதா மருத்துவமனை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டதை தொடர்ந்து, தனி நீதிபதி மருத்துவமனைகளுக்கு சீல் வைத்ததை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த சில நாட்களாக சுதா மருத்துவமனை மீண்டும் வழக்கம்போல் செயல்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த ஐகோர்ட் தமிழக அரசு சீல் வைத்தது செல்லும் என்றும், மீண்டும் மருத்துவமனைக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள சுதா மருத்துவமனையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்றுமுன்தினம் மாலை ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேம குமாரி தலைமையிலான குழுவினர் கருத்தரித்தல் மையம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவு உள்ளிட்டவற்றுக்கு சீல் வைத்தனர்.
இது குறித்து பிரேம குமாரி கூறுகையில்,``மருத்துவமனைக்கு சொந்தமான 10 ஸ்கேனிங் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனை 8ம் தேதி முதல் செயல்படாது’’என்றார்.