திருப்பூர்: காலத்தின் தேவை கருதி கம்யூனிஸ்ட கட்சிகள் ஒன்று பட வேண்டும் என திருப்பூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ேதசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கூறினார். இது குறித்து அவர் திருப்பூரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவில் வறுமை அதிகரிப்பதாக சர்வதேச கருத்து கணிப்புகள் சொல்கின்றன. பசியுடன் மக்கள் இருக்கிறார்கள். வேலையின்மை இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்படுவதன் மூலம் சமூகநீதி தகர்க்கப்படுகிறது.
2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜ ஆட்சி முறியடிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்பு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர வேண்டும். தமிழகத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் திமுக தலைமையில், ஒன்றுபட்டதால் பாஜவால் வர முடியவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் இதுபோல் இல்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல பிரிவாக செயல்படுகிறது. காலத்தின் தேவை கருதி கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.