சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார் தமிழகத்தில் 33 வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் மயிலாப்பூரில் உள்ள சமூக நலக் கூடத்தில் நிருபர்களை சந்தித்து பேசியதாவது; தமிழகத்தில் 96% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 88.6% பேர் இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர். இன்னும், 92. 45 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. முதல் தவணை, இரண்டாம் தவணை, பூஸ்டர் டோஸ் என எல்லாம் சேர்த்து 4.78 கோடி டோஸ் தமிழகத்தில் இன்னும் செலுத்த வேண்டியுள்ளது.
மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள் ஆகியவற்றை கையாள்வது குறித்து விவாதிக்க வருகிற 11ம் தேதி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி செயல் இயக்குநர்கள், உள்ளாட்சித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆகியோருடன் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதனடிப்படையில், 18,643 பேர் தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, 1,13,653 மாதிரிகள் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15,805 கொசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.