புதுடெல்லி: எல்லை பாதுகாப்பில் அதிக உயரம் கொண்ட மலை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு நவீன ரக டிரோன்களை உருவாக்கும் பணியில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவம் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில்,அதிக உயரம் கொண்ட மலை பகுதிகள், சீனாவை ஒட்டிய எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு நவீன ரக டிரோன்களை தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்(எச்ஏஎல்) நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக டிரோன்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதில் ஏவுகணைகள் உள்பட 40 கிலோ எடையை சுமக்கும் திறனுடைய டிரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 60 டிரோன்கள் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டிரோன்கள் பொருள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்த முடியும்’’என்றன.