புதுடெல்லி: ‘நிர்பயா வழக்குக்கு பின்னர் பலாத்காரத்துக்கு பின் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன’என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘டெல்லியில் நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்குக்கு பிறகு பலாத்காரத்துக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பெண்கள் அதிகளவில் கொல்லப்படுகிறார்கள்.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் குற்றவாளிகள் அவர்களை கொலை செய்ய துணிகின்றனர். இது ஆபத்தான சூழலை உருவாக்கும்’’என்றார். அசோக் கெலாட்டின் இந்த பேச்சு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால், ‘முதல்வர் கெலாட் ஒரு பாலியல் குற்றவாளியை போல் கருத்துகளை தெரிவிக்கக்கூடாது’என்று விமர்சித்துள்ளார்.