×

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி நியமனம்: அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் முதன்மையான ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) இயக்குநர் ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சிஎஸ்ஐஆரின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.   இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சிஎஸ்ஐஆர் நாடு முழுவதும் 38 ஆய்வகங்களை கொண்டுள்ளது.

விண்வெளி, கட்டமைப்பு, கடல் அறிவியல், உயிர் அறிவியல், உலோகம், ரசாயனங்கள், சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இந்த நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில், சிஎஸ்ஐஆரின் புதிய இயக்குநர் ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சிஎஸ்ஐஆரின் இயக்குநராக பதவியேற்கும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் நல்லதம்பி கலைச்செல்வி. இவர், தனது பள்ளிப்படிப்பை தமிழ்வழியில் படித்துள்ளார்.

காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - ஒன்றிய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். ஆராய்ச்சி துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ள கலைசெல்வி, மின்வேதியியல் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார். 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் ஆறு காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். இவர், பதவியேற்கும் நாளில் இருந்து சுமார் 2 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை பணியில் இருப்பார். சிஎஸ்ஐஆரில் நுழைவு நிலை விஞ்ஞானி ஆராய்ச்சியில் தனது வாழ்க்கையை தொடங்கி, இன்று அதே துறைக்கு இயக்குநராக உயர்ந்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 


Tags : Tamil Nadu ,Ambasamudra , Appointment of Tamil Nadu Woman Scientist as Director of Scientific and Industrial Research: from Ambasamudra
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...