×

மூணாறு அருகே இன்று மீண்டும் நிலச்சரிவு: 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன

திருவனந்தபுரம்: மூணாறு அருகே புதுக்குடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்ட அதே இடத்தில் இன்று அதிகாலை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. கேரளாவில் கடந்த சில வாரங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் முல்லை பெரியாறு, இடுக்கி உள்பட அணைகள் வேகமாக நிரம்பின. இதைத்தொடர்ந்து முல்லை பெரியாறு அணை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் மூணாறு அருகே கண்டலா புதுக்குடி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 கடைகள், ஒரு கோயில் மற்றும் ஒரு ஆட்டோ மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகே தமிழக தோட்ட தொழிலாளர்கள் சுமார் 175 குடும்பத்தை சேர்ந்த 450க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

அங்குள்ள மலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இது திசை மாறியிருந்தால் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த பெரும்பாலானோர் மண்ணுக்கடியில் புதைந்திருக்க கூடும். அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக மூணாறு - வட்டவடா நெடுஞ்சாலை சேதமடைந்தது. இதனால் நேற்று பல மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்தன. நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து மாற்றப்பட்டதால் இன்றும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இது குறித்து அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடுக்கி அணை திறப்பு
இடுக்கி அணை நிரம்பியதை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீல எச்சரிக்கையும், பின்னர் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ரூல்கர்வ் அட்டவணைப்படி நீர்மட்டம் 2383.53 அடியாக (கடல் மட்டத்தில் இருந்து) உயர்ந்ததை தொடர்ந்து இன்று அணையை திறக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 10 மணியளவில் இடுக்கி அணையின் ஒரு மதகு திறக்கப்பட்டது. இதன் மூலம் வினாடிக்கு 50 கன மீட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தை தொடர்ந்து இன்று காலை 3 மதகுகள் திறக்கப்பட்டன. இதன் மூலம் அணையில் இருந்து வினாடிக்கு 2,754 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : Landslide ,Munnar , Landslides again, houses buried in soil, dam opening in tongs
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...