×

உலகம் முழுவதும் 54 லட்சம் பயனர் கணக்கு விவரம் திருடு போனது; உண்மை ஒப்புக் கொண்டது டிவிட்டர்

நியூயார்க்: உலகம் முழுவதும் 54 லட்சம் பயனர்களின் கணக்கு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட விவகாரம் உண்மை என்பதை டிவிட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதளமான டிவிட்டரில், கடந்த ஆண்டு 54 லட்சம் பயனர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு, அதை திருடிய ஹேக்கர், குறிப்பிட்ட ஒரு தளத்தில் ரூ.24 லட்சத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தார். இந்த விவகாரம் டிவிட்டர் பயனர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தகவல் பாதுகாப்பு தொடர்பாக டிவிட்டர் நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தை விசாரித்தது. இதில், உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் பாதிக்கப்பட்டது உண்மைதான் என்பதை டிவிட்டர் நிர்வாகம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. ஆனாலும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள், யார், யார் கணக்குகள் பாதிக்கப்பட்டது என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளது.

டிவிட்டரில் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், ‘கடந்த ஜனவரி மாதம் இந்த குறைபாட்டை இணையதள பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஒருவர் எங்களுக்கு தெரியப்படுத்தினார். உடனடியாக ஜூன் மாத புதுப்பித்தலில் இந்த பிழை சரி செய்யப்பட்டது. அதற்கு முன்பாக, பிழையை பயன்படுத்தி ஹேக்கர் ஒருவர் பயனர்களின் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்களை திருடி உள்ளார். அதே சமயம் யாருடைய பாஸ்வேர்டும் திருடப்படவில்லை’என கூறப்பட்டுள்ளது. பின்னடைவு: ஏற்கனவே, டிவிட்டரை வாங்குவது தொடர்பாக அந்நிறுவனத்திற்கும், உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்குக்கும் இடையே சட்டப் பிரச்னை நடந்து வரும் நிலையில், இந்த தகவல் திருட்டு உண்மையாகி இருப்பது டிவிட்டருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Twitter , 54 lakh user account details stolen worldwide; Twitter admitted the truth
× RELATED ஏமாற்றுவதில் இது புது விதம்டா சாமி…...