உத்திரமேரூர்: உத்திரமேரூர் சதுக்கத்தில், ரூ. 21 லட்சத்தில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
உத்திரமேரூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடமானது பல ஆண்டுகளாக பழுதடைந்து பேதிய இடவசதியின்றி காணப்பட்டது. இதனால், அரசாங்க கோப்புகள் பாதுகாப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இதனைப்போக்கும் விதமாக, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்ட திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து, ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் உத்திரமேரூர் சதுக்கத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.
இந்த விழாவில், உத்திரமேரூர் வட்டாட்சியர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், குமார், நகர செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து கட்டிடத்தினை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார். இதில், உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் லதா, மாவட்ட பிரதி நிதி குணசேகரன், கோவிந்தராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.